Thursday, September 10, 2009

ஜெயமோகனுடன் ஒரு நாள் - பகுதி II



இது தான் சாக்கு என்று தஸ்தயேவ்ஸ்கி 'The Brothers Karamazov'ல் Zosimaவை அறிமுகப்படுத்தும் வகையில் பிரம்ம பிரயத்தனம் செய்வதையும் இதை ஒரு இந்திய மனது ‘குரு’ என்ற ஒரு வார்த்தையில் புரிந்து கொண்டிருக்கும் என்றேன். மெலிதாக சிரித்தார். ரஷ்ய புராதன கிறித்துவம் கீழை நாட்டு தரிசனங்களுக்கு மிக அருகாமையிலானது. அதன் வளர்ச்சி பெளத்த சமண தத்துவங்களால் பாதிப்பு அடைந்தது என்றார். யூத மரபியல், கிரேக்க-ரோமானிய மரபியல் இவற்றுக்கு முற்றிலும் வேறான  ஒரு இருப்பை அது கொண்டிருப்பது தல்ஸ்தோய்- தஸ்தயேவ்ஸ்கி வரையில் தொடர்கிறது என்றார்.

தஸ்தயேவ்ஸ்கியின் 'The Brothers Karamazov'ல் சில விமர்சகர்கள் ‘Elder Zosima' பற்றிய பகுதிகள் தேவை இல்லாமல் நீட்டி முழக்கப்பட்டுள்ளன் என்று கூறுவதை வருத்தத்துடன் முறையிட்டேன். இதையே நான் நாவலின் முக்கியமான பகுதியாக கருதுகிறேன் என்றேன். Zosima இளவயதில் இறந்த தனது மூத்த சகோதரனின் ஈடேற்றத்தை அல்யோஷாவிடம் காண்கிறார். அவர் அல்யோஷாவுக்கு போதித்த அடிப்படை அறத்தை வலியுறுத்தும் விதமாக 'Ilyushka'வின் இறுதி சடங்கில் நாவல் முழுமை பெறுகிறது. மேலும் 'Crime and Punishment' நாவலில் ரஸ்கல்நிகொவ் இறுதி மன மாற்றம் அடைவது நம்ப முடியாத அளவுக்கு 'அவசரமாக' சித்தரிக்கபட்டிருப்பதாக வைக்கப்படும் விமர்சனத்துக்கு இவரின் எதிர்வினை என்ன என்று கேட்டேன்.

அவர் மனித ஆழ்மனம் அளவிட முடியாத ஆழமும் ஊகிக்க முடியாத திருப்பங்களுக்கும் தயாராக இருப்பது என்றார்.  ஒரு தருணத்தின் மாற்றம் ஒரு சிறு விதை போல் ஆழ்மனதில் பதிந்து கிடப்பது என்றும் அது அடையும் மாற்றத்தை இயந்திரத்தனமாக 'process'  ஆக சித்தரிப்பது சாத்தியமன்று என்றார். உதாரணமாக விவேகானந்தர் ராமகிருஷ்ணரை சந்தித்ததை விளக்கினார். முதல் முறை பார்த்த உடனேயே 'உனக்காக எவ்வளவு நாள் காத்திருந்தேன்' என அரற்றிய ராமகிருஷ்ணரை கண்டு கொஞ்சம் விலகி சென்ற நரேந்திரனின் கணுக்காலை பற்றிய மாத்திரத்தில் விவேகானந்தர் அடைந்த மாற்றத்தின் தருணம் , Oxford - Sorbonne பல்கலைகழகங்களில் படித்த நடராஜ குரு கிராமத்து பூசாரி கணக்காக இருந்த ஸ்ரீ நாராயண குரு 'நடராஜ், இவிடே இருக்கட்டே'  என்று  ஒற்றை வரியில்  மாற்றிய தருணம்,  பின்னர் குரு பூர்ணிமா அன்று ஒரு காவி துண்டு கொடுத்து (அது என்ன நாள் என்று அறிந்திராத ) அவரை சன்யாசி ஆக்கிய தருணம் இவை எல்லாம் தருணம் என்ற மிக சிறிய கால அளவில் ஆழ்மனம் வெகு காலமாக சமைத்து கொண்டு இருக்கும் ஆக்கங்கள் வெளிப்படும் முறை என்றார்.

தல்ஸ்தோய் இதை சித்தரிப்பதில் மிகக் கை தேர்ந்தவர் என்றார். பிரபஞ்ச அளவில் ஒப்பிடும் பொது மனித வாழ்க்கையின் அளவு மிகக் குறைந்தது, அர்த்தமற்றது என உணரும் பொழுது விளையும் இயற்கையான எதிர்வினையான 'existentialism'த்திற்கு முரணாக தல்ஸ்தோய் அறத்தை முன் வைக்கிறார். வாழ்க்கை கடல் அலையின் மேல் கணத்தில் தோன்றி மறையும் நீர்க்குமிழியாக இருப்பதினாலேயே அறம் மானிட வாழ்வின் இன்றியமையாத தேவை என்றார்.

இவர்களுக்கும் பின் இருந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் Freud உலகை படுத்திய பாடு பற்றி முறையிட்டேன். பிராய்டின் பலவகைக் கட்டுமானங்கள் 'evo devo  theory' மற்றும் 'neuron' இயக்க தியரிகளாலும் முறியடிக்கப்பட்டு வருவதை பற்றிக் கேட்டேன். இவ்விஷயத்தில் VS ராமசந்திரன் சில கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருவதை பற்றி கேட்டேன்.  என்றாலும் சமீபகாலமாக எல்லா விஷயத்திற்கும் 'neuron' களை சரணாகதி அடைவதை 'Neuro Reductionism' என்ற கருதுகோள் முலம் விமர்சிக்கப்படுகிறது என்றார். Freud க்கு மாற்றாக அவர் வாழ்ந்த காலத்திலேயே CG Jung தனது மாற்று கருத்துக்களை வடிவமைத்ததை பற்றி கூறினார். Freud நடத்திய 'experimental data' விலேயே பிழைகள் இருந்ததை பற்றி கூறினார். Freud அடைந்த பிரபலத்திற்கு காரணம் அவரின் எழுத்துக்களே என்றும், சான்றாக  அவருக்கு ஒரு காலத்தில் நோபெல் பரிசு 'இலக்கியத்துக்கு' பரிந்துரைக்கப்பட்டது என்றும் கூறினார்.

Freud ன் உளப்பகுப்பு ஆய்வியலில் மனித மனத்தின் வளர்ச்சியையும் யூத மரபின் தொன்மையான உருவகத்திற்கும் (There was a Paradise, It was lost) உள்ள ஒற்றுமையை கடற்கரை மணலில் காலால் படம் வரைந்து விளக்கினார். மார்க்ஸ் நினைத்த ஆதி கம்யூனிசம் இந்த உருவகத்தில் இருந்து விளைந்ததே என்றார். இவ்வாறு பேசி கொண்டே Sir Francis Drake தரை தட்டிய Drakes Estuero வரை நடந்து திரும்பி இருந்தோம். ஒரு சில நிமிடங்களே மேகத்திரை விலகி சூரியன் தென்பட்டான். அப்போது கடலில் இருந்த சிற்றலைகளில் தெரிந்த நுரைப்பு கண்ணுக்கு பேருவகை தந்தது. பின் மீண்டும் பனி மூட்டம். நடை. பேச்சு. சில நேரம் நீரின் ஓட்டத்தால் எலும்பு போன்றே ஒரு குட்டித் திமிங்கலம் போன்று தோற்றம் அளித்த சில கோடுகள் அமைந்த  ஒரு பாறையை பார்வையிட்டார்.

இப்படியாக திரும்பி  கார் நிறுத்திய இடத்தை வந்து அடைந்தோம். மற்றும் வேறு ஒரு கார் மட்டுமே தென்பட்டது. அங்கு ஒரு cafe  இருந்தது. இந்த அத்துவான காட்டில் எவ்வாறு வியாபாரம் நடக்கும் என்று கவலைப்பட்டார். அன்று செவ்வாய்கிழமை என்றும் கோடை காலம் என்பதால் சனி ஞாயிறு 'சும்மா கூட்டம் அலை மோதும்' என்று அவரை ஆறுதல் படுத்தினேன். பின்பு வந்த வழியே திரும்பி Mendocino செல்லும் திட்டத்தில் பெருமளவுக்கு கடலை ஒட்டியே செல்லும் CA-1 ரோட்டில் பயணித்தோம்.

பனித்திரை அதற்குள் அவருக்கு சலிப்புடியது போலும். ஊட்டியில் தங்கும் போது மூன்று நாளைக்குப் பிறகு வெய்யில் அடித்தால் நன்றாக இருக்கும் என தோன்றும் என்று குறிப்பிட்டார். கொஞ்சம் நேரம் ஜேசுதாஸ் பட பாடல்கள் கேட்டார். பின்பு கொஞ்சம் கண்ணயர்ந்தார். Mendocino செல்ல இன்னும் 3:30 மணி நேரம் ஆகும். சுத்த மடையனாக இடை விடாது ஒட்டி தள்ளினேன். இடது புறம் பசிபிக் கடல் வருவதும் போவதுமாக இருந்தது. Tomales Bay என்ற காயல், வைக்கப்போர் நிறத்தில் மேய்ச்சல் வெளிகள், திடீரென்று பனித்திரை கூடிய மரங்கள், பெரும்பாலும் பைன் மரங்கள், பெரிதும் சிறிதுமான  பாலங்கள், பெரிய பாலங்களுக்கு அடியில் பெரும் நதிகள் (Russian River), சிறிய பாலங்களுக்கு அடியில் சிற்றோடைகள் என காட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருந்தது.

தொடரும்.....











 

0 Comments:

Post a Comment

<< Home